மத்திய ரயில்வே துறை சென்னை மற்றும் புது டில்லி ராஜதானி எக்ஸ்பிரஸ் இரு தினங்களுக்கு மட்டும் இயக்கப்படும்


 


மத்திய ரயில்வே துறை, புது டில்லி - சென்னை மற்றும் சென்னை - புது டில்லி ராஜதானி எக்ஸ்பிரஸ் 13.5.2020லிருந்து இயக்கப்படும் என்று அறிவித்து இருந்தது. நேற்று மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற காணொலி காட்சியின்போது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 31.5.2020 வரை வழக்கமாக இயக்கப்படும் ரயில் சேவைகளை தொடங்காமலிருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இருப்பினும், ஏற்கனவே முன் பதிவு செய்யப்பட்ட காரணத்தால் இரு தினங்களில் (14.5.2020 மற்றும் 16.5.2020) ரயில் சேவைகள் இயக்கப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது. இவ்விரு இரயில்கள் தவிர இதர வழக்கமான இரயில் சேவைகள் இயக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜ்தானி இரயில் சேவைகள் இயக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜ்தானி ரயிலில் உள்ள அனைத்து பெட்டிகளும் குளிர் சாதன வசதி உள்ளதாகவும், ராஜ்தானி ரயிலில் சுமார் 1100 பயணிகள் வரை பயணம் செய்வர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குளிர் சாதன வசதி கொண்ட இந்த ரயில்கள் மூலம் நோய் தொற்று பரவ வாய்ப்பு உள்ளதாலும், சென்னைக்கு வரும் அனைத்து ரயில் பயணிகளையும் RT-PCR பரிசோதனை செய்து தான் தமிழ்நாட்டிற்குள் அனுப்ப முடியும் என்ற காரணத்தினாலும், 1000-க்கும் மேற்பட்ட பயணிகள் அனைவரையும் ஒரே நேரத்தில் பரிசோதிப்பதில் உள்ள நடைமுறை சிரமங்களையும் கருத்தில் கொண்டு, இந்த ரயில்கள் மூலம் வரும் பயணிகளை ரயில்வே துறை மூலமே RT-PCR பரிசோதனை செய்யப்பட்டு, பரிசோதனை முடிவுகளை பெற்ற பின் தொற்று பாதித்தவர்களை மருத்துவமனைகளிலும், தொற்று இல்லாதவர்களை தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கும் வகையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் மாண்புமிகு மத்திய ரயில்வே துறை அமைச்சர் அவர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்கள். மேலும், சென்னையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், வைரஸ் நோய் தொற்று கட்டுப்படுத்தும் வரை சென்னைக்கு வழக்கமாக இயக்கப்படும் ரயில்களை இயக்க வேண்டாம் என்ற கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார்கள்.


Post a Comment

புதியது பழையவை