பூரி ஜகந்நாதர் கோயில் உலகப் புகழ்பெற்றது. இங்கு பகவான் விஷ்ணு வாசம் செய்வதால் பக்தர்களால் இது வைகுண்டத்துக்கு இணையாகப் போற்றப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் ரதயாத்திரை புகழ்பெற்றது. ஒவ்வோர் ஆண்டும் ஆஷாட மாதத்தில் ஒன்பது நாள்கள் நடைபெறும் இந்த ரதயாத்திரையில் பிரமாண்டமான மூன்று தேர்கள் செய்யப்பட்டு யாத்திரை நடைபெறும். இதற்காக ஒவ்வோர் ஆண்டும் புதிய தேர்கள் செய்யப்படும். உலகெங்கிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த யாத்திரையை தரிசனம் செய்ய வருவார்கள்.
பழைமையான இந்த ஆலயத்தில் பெருமைகள் மிகவும் அதிகம். இங்கு பகவான் கிருஷ்ணர் ஜகந்நாதராக இருக்க, அவரின் அண்ணனான பலராமரும் மாயா சக்தியாய்த் தோன்றிய சுபத்ராவும் அவருடன் கோயில் கொண்டுள்ளனர். இந்த ஆலயத்தின் அதிசயங்கள் பல. அவற்றுள் முக்கியமானது இங்கு பகவான் கோயில் கொண்ட வரலாறு.

பூரி ஜகந்நாதர் ஆலயம் தோன்றியது எப்படி?
பகவான் கிருஷ்ணரின் அவதாரம் முடிவுக்கு வந்தபோது அவர் உடலில் இருந்து இரண்டு பகுதிகள் மட்டும் பிரிந்து ஒன்று கடலிலும் மற்றொன்று வனத்துக்குள்ளும் விழுந்தன. வனத்தில் விழுந்த பகுதியை பழங்குடி மக்கள் கண்டெடுத்து, ‘நீல மாதவர்’ என்று வழிபட்டனர். கடலில் விழுந்த பகுதி மூன்று கட்டைகளாக மாறி மிதந்துகொண்டு இருந்தது.
இந்தப் பகுதியை இந்திரத்துய்மன் என்ற விஷ்ணு பக்தன் ஆட்சி செய்துவந்தான். அவன் ஒரு நாள் வனத்துக்குச் சென்றபோது அங்கே நீல மாதவரைப் பற்றி அறிந்து அவரை தரிசனம் செய்ய விரும்பினார். ஆனால் பழங்குடி மக்கள் அதுவரை வேறு யாரையும் அந்த விக்ரகத்தை தரிசனம் செய்ய அனுமதித்ததில்லை. மன்னன் கேட்கும்போது மறுக்க இயலாமல் அவனை விக்ரகம் இருக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கே சென்று பார்த்தபோது நீல மாதவர் திருமேனி மறைந்துவிட்டது. பழங்குடி மக்களும் மன்னரும் இதனால் வருத்தமடைந்தனர்.
பகவான் விஷ்ணுவுக்கு ஆலயம் எழுப்பலாம் என்று அவன் ஆசைப்பட்டு இப்படி விக்ரகம் மறைந்துபோனது அவனுள் வருத்தத்தை தந்தது. அன்று அவன் கனவில் தோன்றி பகவான் விஷ்ணு, “மன்னா வருந்தாதே... நீ எங்கே கோயில் கட்டுகிறாயோ அங்கேயே நான் கோயில் கொள்வேன். அது வைகுண்டத்துக்கு இணையான தலமாகத் திகழும்” என்று உறுதியளித்தார். இதைக் கேட்ட மன்னன் மகிழ்ந்து பூரியில் பெரிய ஆலயம் ஒன்றை எழுப்பினார் என்கிறது தலவரலாறு.

முழுமையடையாத விக்ரகங்கள் பிரதிஷ்டையானது எப்படி?
ஆலயம் தயாரானதும் அதற்குள் வழிபட திருமேனிகள் வேண்டும் அல்லவா... அதற்காக அவர் பெருமாளை தியானித்தார். பெருமாள் கனவில் தோன்றி “நாளைக் காலை கடற்கரைக்குச் செல். அப்போது உன் அருகே வரும் கட்டையைக் கொண்டு மூலவர் திருமேனியைச் செய்” என்று கட்டளை இட்டார். மன்னனும் அதேபோன்று காலையில் கடற்கரைக்குச் செல்ல, பல கட்டைகள் கடலில் மிதந்து சென்றன. ஆனால் எதுவும் மன்னன் அருகே வரவில்லை. மன்னன் மனத்தில் இறைவனைத் துதித்தார். அப்போது மூன்று கட்டைகள் அவன் அருகே வர மூன்றையும் எடுத்துக்கொண்டு ஆலயத்துக்குத் திரும்பினான்.
நாட்டின் சிற்பிகளுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தான். வைகுண்டத்தில் பெருமாள் இருப்பதுபோன்று உங்களால் ஒரு திருவடிவைச் செய்யமுடியுமா என்று கேட்டான். யார் வைகுண்டம் சென்று பெருமாளை பார்த்திருகிறார்கள்... அதேபோன்று திருமேனி செய்ய?
அதனால் யாரும் முன் வரவில்லை. அப்போது வயதான ஒரு சிற்பி வந்தார். 28 நாள்களில் தான் அந்தத் திருமேனியைச் செய்வதாகவும் அந்த 28 நாள்களும் ஆலயத்துக்குள் தன்னை வைத்துப் பூட்டிவிட வேண்டும் என்று சொன்னார். மன்னரும் வேறு வழியின்றி ஒப்புக்கொண்டார்.
தினமும் மன்னன் ஆலய வாசலுக்குச் செல்வார். உள்ளே சிற்பி வேலை செய்யும் ஒலி கேட்கும். மகிழ்ச்சியோடு திரும்ப வந்துவிடுவார். ஆனால் 27-ம் நாள் மன்னன் சென்றபோது சத்தம் எதுவும் இல்லை. ஒருவேளை வயதான சிற்பிக்கு ஏதேனும் ஆகிவிட்டதோ என்று பயந்து ஆலயத்தின் கதவைத் திறந்தான். என்ன ஆச்சர்யம், உள்ளே யாரும் இல்லை. அந்த சிற்பி மாயமாகி இருந்தார். சிற்பங்களும் கைகால்கள் இன்றி முழுமையடையாமல் இருந்தன. தான் தவறு செய்துவிட்டதை எண்ணி மன்னன் வருந்தினான்.
அப்போது பகவான் மகாவிஷ்ணு அசரீரியாக, தானே சிற்பியாக வந்ததாகவும், நிபந்தனையை மீறிக் கதவைத் திறந்ததால் சிலை வடிக்கும் பணி தடைப்பட்டுவிட்டது என்றும் கூறினார். மேலும் இதனால் பாதகம் இல்லை. இதே திருமேனியில் நான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பேன் என்று உறுதியளித்தார். அங்கே கறுமை நிறத்தில் உள்ள விக்கிரகம் தான்தான் என்றும் வெண்மை நிறத்தில் இருப்பது பலராமர் என்றும் மஞ்சள் நிறத்தில் உள்ளது, கோகுலத்தில் அவதரித்த மாயா துர்கையான சுபத்திரை என்றும் சொல்லியருளியது அந்த அசரீரி. மன்னன் பெருமகிழ்ச்சி கொண்டு அவற்றை பிரத்ஷ்டை செய்து வழிபாடுகள் செய்தான்.

பூரி ஆலயத்தின் மீது பறவைகள் விமானங்கள் பறக்காதா?
பூரி ஆலயத்தின் மீது பறவைகளும் விமானங்களும் பறப்பதில்லை. இதற்குக் காரணம், இந்த ஆலயத்தை கருடபகவான் சுமந்துகொண்டிருப்பதுவே என்கிறது புராணம். கருடன் பறவைகளின் தலைவன். எனவே அவன் மீது தங்கள் நிழல்படுவது முறையன்று என்று பறவைகள் பறப்பதில்லை என்கிறது புராணங்கள்.
அறிவியலாளர்கள் அதற்குச் சொல்லும் காரணம், பூரி ஜகந்நாத் ஆலயம் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ளது. ஆயிரம் அடி உயரம் உள்ள அந்த ஆலயத்தின் மீது காற்றின் வேகம் மிகவும் கடுமையாக இருக்கும். அந்தப் பகுதியில் அந்த வேகத்துக்கு எதிராகப் பறந்து செல்லும் பறவைகள் இல்லை என்றும் கழுகு போன்ற பறவைகளாலேயே அந்த வேகத்துக்கு எதிராகப் பறக முடியும் என்று சொல்கிறார்கள்.
ஆனால் இத்தனை காலத்தில் பருந்துகள் கூடக் கோயிலுக்கு மேல் பறந்ததில்லையே ஏன் என்னும் பக்தர்களின் கேள்விக்கு ‘அது இயல்பான ஒன்றாக இருக்கலாம்’ என்று சொல்கிறார்கள்.
விமானங்களும் பறப்பதில்லை
பூரி ஜகந்நாதர் ஆலயத்தின் மேற்கூரையில் எட்டு வட்டவடிவிலான உலோக யந்திரத் தகடுகள் (சக்கரங்கள்) பொறுத்தப்பட்டுள்ளன என்றும் அவை வயர்லஸ் சிக்னல்களைத் தடை செய்யும் ஆற்றலை உடையன என்றும் எனவேதான் விமானிகள் இந்த ஆலயத்தின் மீது பறப்பதில்லை என்றும் சொல்கிறார்கள் பக்தர்கள்.
ஆனால் இதற்கு விமானப் போக்குவரத்துத் துறையினர், “இந்த வான்வெளி வழியாக எந்த விமானப் பாதையும் இல்லை என்பதுதான் விமானங்கள் பறக்காததற்குக் காரணம்” என்று சொல்கிறார்கள்.
ஆனால் இப்போது அல்ல, எப்போதுமே அதன் மீது விமானங்கள் பறக்க முடியாது. போர்க்காலங்களில் கூட விமானங்கள் விலகித்தான் சென்றிருக்கின்றன் என்று நம்பிக்கையோடு சொல்கிறார்கள் பக்தர்கள்.
தங்கத்துடைப்பத்தால் சுத்தம் செய்யும் மன்னர்
இந்த ஆலயத்தில் ஒரு ஆண்டில் பல உற்சவங்கள் நடைபெற்றால் ஆண்டுக்கு ஒருமுறை நிகழும் இந்த ரதயாத்திரை மிக முக்கியமானது. உலகெங்கிலும் இருந்து சாதுக்கள் பூரியில் குவிவார்கள். இந்த ஆலயத்தின் தேரோட்டத்தின்போது மன்னர் அந்த ரதம் ஓடும் வீதியைத் தங்கத் துடைப்பத்தால் பெருக்குவார். இந்த வழக்கம் ஆயிரம் ஆண்டுகளாக உள்ளதாகவும் இன்றும் அந்த நடைமுறை மன்னரின் பரம்பரையினரால் பின்பற்றப்படுகிறது. இது ஒரு காலத்தில் பூரி செல்வச் செழிப்போடு விளங்கியதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது என்கிறார்கள்.

இப்படி பூரி ஜகந்நாதர் ஆலயத்தின் சிறப்புகளும் அதிசயங்களும் பலப்பல. இப்படிப் பட்ட ஆலயத்தில் நேற்று (1.7.2022) ரதயாத்திரை தொடங்கியது. பகவான் ஜகந்நாதர், பலராமர், சுபத்திரை எழுந்தருளியிருக்கும் மூன்று ரதங்களும் தம் பயணத்தைத் தொடங்கின. பக்தர்களின் பஜனை மற்றும் கோஷங்களுக்கு இடையே மூன்று ரதங்களும் மூன்று பிரமாண்ட ஆலயங்கள் அசைவதைப் போல அசைந்து வந்தன. இந்தத் தேரோட்டம் வரும் 9-ம் தேதிவரை நடைபெறும்.
from விகடன் https://ift.tt/xvK0BZ1
via IFTTT
கருத்துரையிடுக